Sunday 13 October 2019

இயற்கை தந்த சருமம்

தோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அது ஆறு மாத குழந்தை என்பதால் டாக்டர்களுக்கும் சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் நோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். உடுத்திய ஆடை முதல் உபயோகித்த கிரீம் வரை அனைத்தும் சருமத்தில் உராய்ந்து குழந்தைக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.

அதை பார்த்து பதறிப்போன ரூபா குழந்தைக்கு பொருத்தமான சரும பராமரிப்பு பொருட்களை தேடத்தொடங்கி இருக்கிறார். எந்த பொருளும் குழந்தையின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் தனது தாத்தா - பாட்டி பின்பற்றிய இயற்கை வைத்தியத்தை நாடி இருக்கிறார். அதன்படி ரசாயன கலப்பில்லாமல் சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து குழந்தைக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

‘‘தோல் நோய் பாதிப்புக்குள்ளானதால் எனது மகள் மிகுந்த வலியை அனுபவித்தாள். பச்சிளம் குழந்தையாக இருந்ததால் அவளால் அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. ஒரு தாயாக அவளின் வலியை குறைப்பதற்கு என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல் நவீன மருத்துவமும் இல்லை.

தோல் மருத்துவர்களை அணுகியபோது மருந்துகளை மட்டுமே வழங்க முடியும் என்றார்கள். குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர் மருந்துகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தை நாட சொன்னார். வெர்ஜின் தேங்காய் எண்ணெய், பருத்தி உடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியப்பட்டார்கள்’’ என்கிறார், ரூபம் சிங்.

ரூபம் சிங் ஐதராபாத்தை சேர்ந்தவர். மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவரை இயற்கை சரும பராமரிப்பு பொருட்கள் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறது. தனது சகோதரி அனுபமுடன் சேர்ந்து சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

‘‘சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை பொருட்களை தேடிச்சென்று சேகரிக்கிறோம். அவை சருமத்தின் நலம் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இயற்கை மூலப்பொருளாகவே இருந்தாலும் அதனால் சருமத்திற்கு பலன் இல்லை என்றால் அவற்றை பயன்படுத்துவதில்லை. பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாராகும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதிலும் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஒவ்வாமை பிரச்சினையையும் உண்டாகும்’’ என்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai health tips

No comments: