Sunday 15 January 2017

கொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி

கொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும் திறம்படச் செய்துகொண்டிருக்கின்றன. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி டெங்கு, ஜிகா வரை உண்டாக்கும் மிகப் பெரிய காரணியாகச் சின்னஞ்சிறு கொசு உருமாறி இருக்கிறது. சில மாதங்களுக்கு மட்டும் தலை காட்டாமல் ஓய்வெடுத்துவிட்டு, பெரும்பாலான மாதங்களில் ஊரெங்கும் கொசுக்கள் ஒயிலாக வந்துகொண்டிருக்கின்றன. கொசுக்களை அழிக்கக் கொசுவர்த்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, அவற்றிலுள்ள வேதியியல் பொருட்கள் காரணமாகத் தலைவலி, நுரையீரல் தொந்தரவுகள் உருவாகுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இன்னும் சில வீடுகளில் எலி, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் தெளிப்பான்களை, கொசுக்களை அழிக்க வீடு முழுவதும் தெளிக்கும் 'புத்திசாலித்தனம்' உயிரைப் பறிக்கும் அளவுக்கும் கொண்டு செல்லலாம். சரி, கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இயற்கை அமைத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன? வாசனை குளியல் குளிக்கும்போது, நீரில் வாசனை அதிகம் தரும் கற்பூரவல்லி, கறிவேப்பிலை, துளசி, செம்பருத்தி இதழ்கள், எலுமிச்சை இலைகள், உலர்ந்த நெல்லி போன்றவற்றைக் கலந்து குளிக்கலாம். புதினா, திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி உடலில் தேய்த்த பின்னர் குளிக்கலாம். 'நலங்கு மாவு' போன்ற மணம்மிக்க இயற்கை குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது. இயற்கையாக உடலில் வாசனை கமழும்போது கொசுக்கள் கடிப்பதற்குத் தயக்கம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை என இருவேளை நீராடி, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. மூலிகை புகை வீட்டுக்கு முன் வேப்பிலை, நொச்சி, மாவிலை, மா மரத்தின் பூக்களைக் கொண்டு புகை போடலாம். கிராமங்களில் பின்பற்றப்படும் இந்த முறை மனிதர்களோடு சேர்த்து, கால்நடைகளையும் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றும். மாலை வேளையில் வீட்டு அறைகளில் சாம்பிராணியோடு உலர்ந்த வேப்பிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலைகளைக் கொண்டு சிறிது நேரம் புகை காட்டலாம். அந்தக் காலத்தில் அரண்மனை விருந்தினர்களை வரவேற்க, அகில்கட்டை புகைதான் முதல் தேர்வு. வாய்ப்பு இருந்தால் அகில்கட்டை புகையூட்டி, வீடுகளைத் தூய்மைப்படுத்தலாம். வசம்பு சுட்ட கரி, தர்ப்பைப்புல், எலுமிச்சை புல், மா இலை / பூ, வேப்பிலை, நொச்சி, தேங்காய் சிரட்டை போன்றவற்றை ஒன்றாகக் கலந்து புகை போடலாம் அல்லது இவற்றை நீர்விட்டு அரைத்து வில்லைகளாக வைத்துக்கொண்டும் புகை போடலாம். வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க வேதியியல் கலவை நிறைந்த வாசனை திரவியங்களுக்குப் பதிலாக, சந்தனக் கலவையைப் பயன்படுத்துவது சிறந்தது. கற்பூரம், எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அறைகளில் தெளிக்கலாம். சித்த மருந்தான கற்பூராதி எண்ணெயை லேசாக உடலில் தடவிக்கொண்டால், கொசுக்கடியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். காடுகளில் வாழும் மக்கள், கொசுக்கடி மற்றும் பாம்பு கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணெயைத் தங்கள் உடலில் தடவிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. கொசு கடித்துவிட்டால்… வீட்டைச் சுற்றிச் சுகாதாரமான சூழலை உண்டாக்குவது, தேவையற்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். கொசு வலை அமைப்பதும் பாதுகாப்பான உத்தி. கொசு கடித்த பின் உண்டாகும் அரிப்புக்கு அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குப் புண் ஏற்படாமல் இருக்க இந்த முறை நிச்சயம் உதவும். கொசு விரட்டும் தட்டான்கள் தட்டான்களும் பறவைகளும் நம்மருகே வாழ்வதற்கான சூழல் இருந்தபோது, கொசுக் கூட்டம் நம்மைச் சுற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனென்றால், தட்டான்களுக்கும், சில பறவைகளுக்கும் முக்கிய உணவே கொசுதான். கொசுக்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதற்கு நம் சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இனிமேலாவது, இயற்கையாகக் கொசுக்களை விரட்டும் கொசுவிரட்டி மூலிகைகளைப் பயன்படுத்திக் கொசுக்களின் ஆதிக்கத்தைத் தடுப்போம்! கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

வலி இல்லாத கட்டிகள் புற்றுநோயா?

வலி இல்லாத கட்டிகள் புற்றுநோயா? | என் உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன. அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லை. வலி இல்லாத கட்டிகள் என்றால் புற்றுநோயாக இருக்கும் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். இது உண்மையா? உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவிதம் உண்டு. உங்களுக்குள்ள கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருப்பவை பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகளே! எந்தக் கட்டி? கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங் களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும் ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளே! இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை. சிகிச்சை தேவையா? கட்டி உள்ள பகுதியில் வலி உண்டாகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, நோய்த்தொற்று ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடலாம். சாதாரணக் கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் அந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது. கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Saturday 14 January 2017

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?

இன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடு கிறார்கள். 'காலை வேளைக்கும் சேர்த்து மதியம் சாப்பிட்டுக்கொண்டால் போயிற்று' என்கிறார்கள். ஆனால் காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறு என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள். ஏன் அவசியம் காலையில் சாப்பிட வேண்டும்? இரவு உணவுக்குப் பின்னர் 6 முதல் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாகச் செயல்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது. அதிலும் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலைச் சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும். மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக் கிறது. காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். காலைச் சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதய நோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம். எனவே, கட்டாயம் காலை உணவை உண்போம்.

‘பச்சை ஆப்பிள்’... பல நன்மைகள்

'தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது' என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை.

ஆப்பிளிலும், 'கிரீன்' ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி...

* கிரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் கிரீன் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

* கிரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான தாதுப்பொருட்களும் அடங்கியிருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.

* கிரீன் ஆப்பிள், குடலில் உள்ள பாதிப்புகளைச் சரிசெய்கிறது. அதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், குடலில் தங்கும் கிருமிகள், நச்சுகளை அகற்றி குடல் இயக்கத்தைப் பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* உடலின் மிக முக்கியச் செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.

* இதயத் தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான எச்.டி.எல்.லை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.

* வயதான காலத்தில் ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வர விடாமல் தடுக்கும் பண்புகளை கிரீன் ஆப்பிள் கொண்டிருக்கிறது.

* நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும், ஆரோக்கியம் காக்கப்படும். அத்துடன், கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் நொதிகளுக்குத் தூண்டுகோல் ஆகிறது.

Tuesday 10 January 2017

ஒவ்வாமை நம்மை என்ன செய்யும்

ஒவ்வாமை நம்மை என்ன செய்யும்|அலர்ஜி எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு ஒவ்வாமை என பொருள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை பயன்படுத்துவது, பிடிக்காத வாசனையை நுகர்வது, செல்லபிராணிகளை கொஞ்சுவது போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமையால் பல நோய்கள் வரலாம். அவற்றிற்கு காரணம் என்ன? என்பதை முறையாக கண்டு பிடித்து உரிய சிகிச்சை அளித்தால் தான் நோய் குணமாகும். ஆயுர்வேதத்தில் இந்நோயினை பீனஸம், பிரதிச்யாயம் என அழைப்பார்கள். நாம் சுவாசிக்கும் போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசு, மகரந்தம் போன்றவை மூக்கில் ஏறி தும்மலை ஏற்படுத்தும். சில நேரங்களில் உணவின் நறுமணமும் இதனை ஏற்படுத்தும் மகரந்த துகள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒவ்வாமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஒவ்வாமையை தூண்டும் பொருட்களை அலர்ஜென் என்று கூறுவார்கள். சிலருக்கு பெயின்டு வாசனையால் ஒவ்வாமை ஏற்படும். செடி, கொடிகளின் மகரந்தம் காற்றில் பறந்து போகும் போது கூட ஒவ்வாமை ஏற்படும். சூடான வறண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். குளிர்காலத் திலும், மழை பெய்யும் நாட்களிலும் மகரந்தம் அதிகமாக இருக்காது. இது தவிர பரம்பரையாகவும் சிலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். தாய் அல்லது தந்தைக்கு ஒவ்வாமை இருந்தால் அது குழந்தைகளுக்கும் வரலாம். நோயின் பாதிப்பு: ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கில் அரிப்பு ஏற்படும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். எந்த வாசனையையும் முகர்ந்து பார்க்க முடியாது. தும்மல் ஏற்பட்டு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். பின்னர் மூக்கு, காது அடைபடும். இருமலும் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். தொடர்ந்து அசதியும், தலைவலியும் இருக்கும். சில நேரங்களில் மருத்துவர்கள் ஈஸ்நோபிலியா அதிகரித்து உள்ளதா? என்பதையும், ஐ.ஜி.இ. அளவையும் சோதிப்பார்கள். நாசல் வாஷ் செய்து கொள்வது இதற்கு மிகவும் சிறந்ததாகும். உப்பு நீரால் இதை செய்யலாம். கடையிலும் இதற்கான மருந்துகள் கிடைக்கும். ஒவ்வாமைக்கு தீர்வு: நாசல் வாஷ் செய்ய ஒரு கோப்பை சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் கலந்து இதனை செய்யலாம். ஒவ்வா மைக்கு ஆன்டி ஹிஸ்டமைன் என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரைப் பார்கள். இந்த மருந்தை பயன்படுத்தும் போது சிலருக்கு சற்று தூக்கம் வரும். எனவே இந்த மருந்தை பயன் படுத்து வோர் வாகனங் களை இயக் கவோ, எந்திர வேலைகள் செய்யவோ கூடாது என்பது அறிவுரையாகும். இப் போது ஒவ்வா மையை தவிர்க்க மூக்கில் அடித்துக் கொள்ளும் ஸ்பிரே கூட வந்து விட்டது. ஒவ்வாமை இருக்கும் போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்து வரை சந்தித்த பின்பே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நவீன மருத்துவத்தில் மூக்கு வளைந்திருக்கிறது என்று சொல்லி அதற்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுக்கச்சொல்கிறார்கள். அதில் குறை இருந்தால் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்த பின்பும் மூக்கில் சளியும், தும்மலும் குறையாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். மூக்கு இருந்தால் ஜலதோசம் வருவது இயற்கை. ஜலதோசத்தை தீர்க்க முயற்சிப்பதை விட மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதே முக்கியமானதாகும். ஒவ்வாமை எனப்படும் பீனஸ நோய்க்கு காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப் படுபவைகள் பின்வறுமாறு: ஒரு மனிதனின் ஆதிபலமா கிய அக்னி எனும் செரிக்கும் தன்மை யின் பலம் குறைவது முதல் காரணமாகும். 2-வது மல, மூத்திரத்தை தொடர்ந்து அடக்குவ தாலும் இந்நோய் ஏற்படும். 3-வது நோய் எதிர்ப்பு தன்மை தொடர்ந்து குறைந்து வருவது, 4-வது ஒவ்வாமையால் வருவதாகும். எளிமையான கை மருந்து : லவங்கப் பட்டையை நன்றாகப் பொடித்துப் புளிச்சாற்றிலோ, தண்ணீரிலோ குழைத்து, சற்றுச் சூடாக்கித் தலையிலும் மூக்கைச் சுற்றிலும் போட்டு வந்தால் மூக்கடைப்பு நீங்கும். திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சிறிய அளவு படிகாரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை ஒரு துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு, அரிப்பு போன்றவை மாறும். புதினா இலைச்சாறு, எலுமிச்சைச்சாறு, ஆரஞ்சு சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு உருவாகித் தும்மல் வருவது குறையும். சிற்றகத்தி இலை, வெள் வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, பால் சாம்பிராணி ஆகியவற்றை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் ஜலதோசம் வராது. இத்துடன் நொச்சியிலைச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் மணலிக்கீரை சேர்த்து கொள்ளலாம். அடிக்கடி மிளகு ரசம் வைத்து குடிக்கலாம். பூண்டு ஜூஸ் குடிப்பதும் நல்லது. சூடான பாலில் மஞ்சல் பொடி சேர்த்துக் குடிப்பது உடலுக்கு நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றைக் கஷாயமாக்கிப் பனங்கற்கண்டு சேர்த்தும் கடிக்கலாம். வெள்ளைப்பூண்டு குழம்பு வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். பால் சேர்க்காத காப்பி குடிப்பது நல்லது. நோய் தடுக்கும் நெல்லிக்காய் லேகியம் : நோயை தணிக்க கார்ப்பு சுவையுடைய சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சிற்றரத்தை, தாளிசபத்திரி போன்ற சூரணங்கள், இந்துகாந்தநெய் போன்றவற்றை கொடுக்க வேண்டும். நீர்க்கோவை என்ற பிரசித்தி பெற்ற மாத்திரையை இஞ்சி சாற்றிலோ, துளசி சாற்றிலோ அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். மீண்டும் நோய் வராமல் இருக்க நெல்லிக்காய் லேகியத்தைக் கொடுக்க வேண்டும். உடனடி நிவாரணத்துக்கு லெஷ்மி விலாஸ ரசம், சுதர்ஸன சூரணம், துளசி கஷாயம் போன்றவை சிறந்த பலனை அளிக்கும். நோயிலிருந்து விடுபடட பிறகு மேலும் நோய் வராமல் இருப்பதற்கு நொச்சி தைலத்தை தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது.

Sunday 8 January 2017

முகத்தை எப்படி சுத்தம் செய்ய டிப்ஸ்

நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. சோப்புகளைப் பயன்படுத்தாமல் முகத்தை இயற்கை வழியில் எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம். தேன் மிகவும் சிறப்பான மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓர் அற்புத பொருள். இது சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும். அதற்கு தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெய் மேக்கப்பை நீக்க மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இனிமேல் பணத்தை வீணாக மேக்கப் ரிமூவர் வாங்க செலவழிக்காமல், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி நீக்குங்கள். எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். தயிர் ஓர் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும். குறிப்பாக தயிரை வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் பயன்படுத்தினால், வெயிலால் கருமையான சருமத்திற்கு, மீண்டும் நிறமூட்டலாம். ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதோடு, மேக்கப்பை நீக்கவும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.

தலைவலி தவிர்ப்போம்!


தலைவலி ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள், தலைவலிதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஏனெனில், சில சமயங்களில் தலைவலி வேறு ஏதேனும் ஒரு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தலைவலி ஏற்படும் இடத்தை வைத்து எதனால் இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். தலைவலியில் என்னென்ன வகைகள் உள்ளன, தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

சைனஸ்:முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.

தீர்வு: சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மருத்துவர் சொல்லும் வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியில் செல்லும்போது கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றால் மூக்கை மூடிக் கொள்ளலாம். யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பது பலன் தரும்.

மைக்ரேன்:முகம் மற்றும் தலைப்பகுதியில் ஒருபுறமாகவே வலி ஏற்படும். அது இடது மற்றும் வலது என்று எந்த புறமாகவும் இருக்கலாம். பார்வைக் கோளாறு மற்றும் காது குறைபாடு, குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதுபோன்ற வலி ஏற்படும்.


தீர்வு: எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது என்று கண்டறிந்து, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதே, இந்த தலைவலியைக் குணப்படுத்துவதற்கான ஒரே தீர்வு. பசி வந்தும் சாப்பிடாமல் இருப்பது, புளிப்பு சுவை ஒத்துகொள்ளாமல் போவது, வெயிலில் அலைவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஊறுகாய், வினிகர், சில இனிப்பு வகைகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. உணவில் இஞ்சி, சீரகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

டென்ஷன் தலைவலி:நெற்றியில் மட்டும் வலியை ஏற்படுத்தும். தலைசுற்றல் மற்றும் தலைகனத்தால் வலி உண்டாகும். டென்ஷனால் ஏற்படும் தலைவலி, கழுத்தில் இருந்து தலை உச்சி வரை இருக்கும்.


தீர்வு: டென்ஷன் ஆகாமல் நம்மை எப்படி அமைதியாகப் பார்த்துக்கொள்வது என்பதைத் திட்டமிடலாம். காலையில் சீக்கிரம் எழுந்து வேலை தொடங்கினாலே, அவசரம் அவசரமாக செய்யும் நிலை ஏற்படாது. இதனால் டென்ஷன் பாதியாக குறையும். பதற்றம் வராமல் இருக்க தங்களை உற்சாகப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, கட்டுக்குள் வைப்பது நல்லது. மருத்துவர் ஆலோசனைப்படி, இதை மாத்திரைகள் மூலமாகவும் சரிசெய்யலாம்.

க்ளஸ்டர்:கண் இமைகளில் வலி ஏற்படும். அஜீரணக் கோளாறுகளாலும் இது போன்ற வலி ஏற்படும்.

தீர்வு: கண்ணைச் சுற்றி ஒருபக்கம் மட்டும் வரும் தீவிர வலி இது. இதன் அறிகுறிகளைப் பொறுத்து தீர்வுகள் மாறுபடும். சிலருக்கு தலையில் ஸ்கேன் செய்தால், என்ன பிரச்னை எனக் கண்டறிய முடியும். மருத்துவர் பரிந்துரைத்தால் வலி நிவாரணிகள் எடுக்கலாம். ஆனால், அதுவும் நிரந்தரத் தீர்வு கிடையாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரைகள், ஊசி மூலம் தீர்வை பெற முடியும். இந்த க்ளஸ்டர் தலைவலி வராமல் தடுக்க, உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்வது நல்லது. தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். உணவில் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை சாப்பிடலாம்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்...
  1. காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, எப்போதும் ஏ.சி அறையில் இருப்பது.
  2. சரியான நேரத்துக்கு தூங்காதது. 6-7 மணி நேரம் தூக்கம் கிடைக்காதபோது உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். தலைவலியும் வரும்.
  3. சிலருக்கு நைட் ஷிஃப்ட் பார்த்து வந்து பகல் நேரத்தில் தூங்குவதாலும், காலை உணவைத் தவிர்த்துவிட்டு வேலைக்கு செல்லும் பழக்கத்தாலும் தலைவலி வரும்.
  4. சுயமருத்துவம் எடுத்துக்கொள்வது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது.
  5. மன அழுத்தம், டென்ஷன், மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகிய காரணங்களால் ஏற்படும் வலி.

Saturday 7 January 2017

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிக்க டிப்ஸ்



பனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால், நாம் பராமரிக்கத்தவறும் உறுப்பு, கால்கள். இதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை 1:


கால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் எப்சம் உப்பு (Epsom salt), ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு, 20 நிமிடங்கள் வரை காலை வைத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான துண்டால் கால்களை ஒத்தி எடுக்க வேண்டும்.


வழிமுறை 2:


கடையில் கிடைக்கும் பியுமிஸ் கல் (Pumice stone) அல்லது சாஃப்ட் பிரஷ் வாங்கி கால்களில் பிரஷ் செய்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.


வழிமுறை 3:


கால்களைச் சுத்தம் செய்த பிறகு, நல்ல தரமான மாய்ஸ்சரைசர் க்ரீமை கால்களில் தடவலாம். கால்களைச் சுத்தம் செய்ததுபோல, கைகளையும் சுத்தம் செய்யலாம்.


ஆரோக்கியமாகப் பராமரிக்க…


10 நாட்களுக்கு ஒரு முறையாவது நகங்களை வெட்டிப் பராமரிக்க வேண்டும். நகத்தை சதை தெரியும் வரை ஒட்ட வெட்டாமல், சிறிய அளவில் நகம் இருப்பதுபோல வெட்டலாம். முடிந்தவரை அவரவருக்கு எனப் பிரத்யேக நகவெட்டிகளை வைத்திருப்பது நல்லது.


பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை, கால் இடுக்குகளில் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதுபோல எண்ணெயை நகங்களிலும் தடவலாம்.நீர் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கீழே வைத்து, கால்களை அதன் மேல் வைத்து உருட்டியபடி, ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.கால்களில் கறுப்பாக அடையாளம் விழுகிற மாதிரியான செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கலாம்.தரமான நகப்பூச்சுகள், அசிடோன் ஃப்ரீ (Acetone free) ரிமூவர்களைப் பயன்படுத்துவது நல்லது.

ஹோட்டலில் சாப்பிடாதீங்க அவ்வளுவுதான் |

ஹோட்டலில் சாப்பிடாதீங்க அவ்வளுவுதான் | எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா?

* பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் இருக்கும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் பல்வேறு உபாதைகள் வரக்கூடும்.

* மேலும் அங்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதாக இருக்காது, இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் குறிப்பாக குடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும்.

* இதேபோன்று கடைகளின் பயன்படுத்தப்படும் எண்ணெயையும் குறிப்பிடலாம், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்தினால் அதன் எதிர்மறை விளைவுகள் அதிகம்.

* குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நலம், ஏனெனில் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது நமக்கு தெரியாது, இதனால் அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீங்காமல் நம்மை பாடாய்படுத்திவிடும்.

* மேலும் எண்ணெய்களில் இருக்கும் ட்ரான்ஸ் பேட்டி ஃஆசிட்டுகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

* உடல் ஆரோக்கியத்தை விருப்புபவர்கள் ருசியாக இருக்கும் ஓட்டல் உணவுகளை விட ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவுகளை சிறந்தது என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா?



குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா? | எனக்குத் தயிர்சாதம் என்றால் மிகவும் இஷ்டம். "குளிர்காலத்திலும், பனிக்காலத்திலும் தயிர்சாதம் சாப்பிடக் கூடாது. சளி பிடித்துவிடும்" என்கிறார் என் அம்மா. இது உண்மையா? இது உண்மையில்லை. தயிர்சாதம் என்றாலே 'அது ஏழைகளின் உணவு' என்று இளக்காரமாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் அடைமழைக் காலம், குளிர்காலம், பனிக்காலம் வந்துவிட்டால், "இந்த கிளைமேட்ல யாராவது தயிர்சாதம் சாப்பிடுவாங்களா? சளி பிடிச்சுக்காதா?" என்று தோளைக் குலுக்கித் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பாலில் தயாரிக்கப்படும் உணவில் தயிருக்கு முக்கிய இடமுண்டு. பாலைக் காய்ச்சி, குளிர வைத்து, உறை ஊற்றிச் சில மணி நேரம் காத்திருந்தால், அது தயிராகிவிடுகிறது. பாலைக் காய்ச்சும்போது அதிலுள்ள கிருமிகள் இறந்துவிடுகின்றன. எனவே, தயிரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை; தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை. பால் தயிராகிறபோது, அது எளிதில் செரிமானமடைகிறது. பால் உறையில் இருக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றிவிடுகிறது. இந்த அமிலமும் பாலில் உள்ள கேசீன் எனும் புரதப்பொருள், கால்சியம் தாதுவும் வினைபுரிகிறபோது, பால் தயிராக மாறுகிறது. இந்த வேதிவினைகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பல வழிகளில் உதவுகின்றன என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. புரோபயாடிக் உணவு! தயிர் ஒரு 'புரோபயாடிக் உணவு'(Probiotic food) என்கிறோம். அப்படி என்றால் என்ன? பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியா என இரண்டு வகை உண்டு. இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை `புரோபயாட்டிக் உணவு' என்கிறோம். நம் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிற பாக்டீரியா வகைகளும் ஈஸ்ட் வகைகளும் தயிரில் அதிகமுள்ளன. இவை உணவுச் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன. நம் செரிமான மண்டலத் தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் உள்ளன. இவை உணவைச் செரிப்பதற்குப் பெரிதும் உதவுவதுடன், உணவுக் கழிவை முறைப்படி வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்போது செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடும்போது, இந்த நல்ல பாக்டீரியா வகைகள் அழிந்துபோகின்றன. எனவேதான், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. தயிர் போன்ற புரோபயாடிக் உணவின் சத்து முழுவதுமாகக் குடலில் உறிஞ்சப்பட வேண்டுமானால், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் ஓரளவுக்காவது இருக்க வேண்டும். சத்துள்ள உணவு தயிர்! தயிர்ச் சத்து மிகுந்துள்ள ஓர் உணவுப்பொருள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தயிரை அப்படியே சாப்பிடலாம். அல்லது தயிரில் மிகக் குறைந்த அளவு உப்பு போட்டுச் சாப்பிடலாம்; அதிகமில்லாமல் சர்க்கரை போட்டு `லஸ்ஸி'யாகச் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் தயிரில் 4 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 3 கிராம் மாவுச்சத்து, 150 மில்லி கிராம் கால்சியம், 0.2 மி.கி. இரும்புச் சத்து போன்றவை உள்ளன. தயிரில் கொழுப்பும் புரதமும் பாலில் இருக்கும் அளவேதான் இருக்கின்றன. ஆனால், வைட்டமின் ஏ, வைட்டமின் ரிபோபிளேவின் அளவுகள் மட்டும் பாலில் உள்ளதைவிட அதிகமாக உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மிதமான அளவில் உள்ளன. 100 கிராம் தயிர் 60 கலோரிகள் ஆற்றலைக் கொடுக்கிறது. நோய்கள் விலகும்! வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிற கெட்ட பாக்டீரியா வகைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல், இந்த நன்மை செய்யும் பாக்டீரியா வகைகளுக்கு உண்டு என்பதால், வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்குத் தயிர் மிகச் சிறந்த உணவு. இதேபோல் இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் தயிர் சிறந்த உணவு. இரைப்பையில் சுரக்கிற அதீத அமிலத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஆற்றல் தயிருக்கு உண்டு என்பதுதான் இதற்குக் காரணம். பால் ஒவ்வாமை உள்ளவர்கள்கூடத் தயிர் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக்கொள்ளும். தயிரில் ஃபோலிக் அமிலம் மிகுதியாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது. தயிர், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாகவும், குடல் புற்று நோயைத் தடுப்பதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குளிர்ச்சிக்கு என்ன தொடர்பு? குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று காலங்காலமாக ஏன் சொல்லிவருகிறார்கள்? சளிப் பிரச்சினை தயிரால் ஏற்படுவதில்லை. சிலருக்குக் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட்டால், உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த மாதிரியான உடலமைப்பைக் கொண்டவர்களுக்குக் குளிர்ச்சியாகத் தயிரைச் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம். இவர்கள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தயிரை எடுத்து, உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; சாதாரண அறை வெப்ப நிலையில் தயிரைச் சாப்பிடலாம். காலை மற்றும் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவுடன் தயிர்சாதத்தைச் சாப்பிடலாம். உடல் பருமன், நீரிழிவு நோய் கொண்டவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதற்குத் தயிர்சாதத்துக்குப் பதிலாக, மோர் சாதம் சாப்பிடலாம். கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

35 வயதை கடந்துவிட்டால்...

35 வயதை கடந்துவிட்டால்...| வயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும். குறிப்பாக, 35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
பொதுவாக 35 வயது வரை உணவில் பெரிதாக கட்டுப்பாடு வைத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் 35 வயதை கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதோடு, சீரான உணவுப் பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகளும்தான் நோய் அண்டவிடாமல் தடுக்கும்.
முக்கியமாக, தற்போது பொதுவான நோயாகி வரும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க, உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. நெய்யை கட்டுப்பாட்டோடு பயன்படுத்த வேண்டும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.
அத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
அதேபோல, வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், தினம் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அருந்துவதும் பலன் தரும்.

சிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள்

சிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள் | நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
அந்தப் பழங்கள்...
செர்ரி: செர்ரி பழத்தில் பைட்டோகெமிக் கல்கள் மற்றும் கொழுப்பு ஏறாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பான சிறுநீரக வீக்கம் ஏற் படாமல் இது தடுக் கிறது.
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. இப்பழம் சிவப்பு நிறமாக இருக்க காரணம், 'ஆந்தோசயனின்' என்ற வேதிப்பொருள்தான். இது உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதுடன், சிறுநீரகத்தில் விஷத்தன்மை ஏற்படாமலும் காக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
சிவப்புத் திராட்சை: இப்பழத்தில் பிளேவனாய்டு என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நைட்ரிக் ஆக்சைடு, உடலில் உள்ள தசைகளின் ரத்த ஓட்டத்தையும் சிறுநீரக ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கிறது.
தர்ப்பூசணி: தர்ப் பூசணி பழத்தில் பொதுவாகவே நீர் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதைச் சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சினை இல்லாமல் கழியும். ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
பப்பாளி: இப்பழத்தில், உடலுக்கு வலுச் சேர்க்கும் சத்துகளும், பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நன்மை பயக்கும்.
கிரான்பெர்ரி: 'குருதிநெல்லி' என்று தமிழில் குறிப்பிடப்படும் 'கிரான்பெர்ரி' பழத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுவியாதியை தடுக்கும் சிறப்புத் தன்மை உள்ளது. அதோடு இப்பழம், இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.