Sunday 8 January 2017

தலைவலி தவிர்ப்போம்!


தலைவலி ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள், தலைவலிதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஏனெனில், சில சமயங்களில் தலைவலி வேறு ஏதேனும் ஒரு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தலைவலி ஏற்படும் இடத்தை வைத்து எதனால் இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். தலைவலியில் என்னென்ன வகைகள் உள்ளன, தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

சைனஸ்:முகத்தில் கண் மற்றும் மூக்கு இணையும் பகுதி மற்றும் நெற்றிப் பொட்டில் வலி ஏற்படும். உடல் வலி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் இது போன்ற தலைவலி ஏற்படும். இந்த வகையில், நெற்றி மற்றும் கண் இமைகளின் கீழ், கன்னங்களில் உள்ள எலும்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.

தீர்வு: சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மருத்துவர் சொல்லும் வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியில் செல்லும்போது கைக்குட்டை, மாஸ்க் போன்றவற்றால் மூக்கை மூடிக் கொள்ளலாம். யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பது பலன் தரும்.

மைக்ரேன்:முகம் மற்றும் தலைப்பகுதியில் ஒருபுறமாகவே வலி ஏற்படும். அது இடது மற்றும் வலது என்று எந்த புறமாகவும் இருக்கலாம். பார்வைக் கோளாறு மற்றும் காது குறைபாடு, குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதுபோன்ற வலி ஏற்படும்.


தீர்வு: எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது என்று கண்டறிந்து, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதே, இந்த தலைவலியைக் குணப்படுத்துவதற்கான ஒரே தீர்வு. பசி வந்தும் சாப்பிடாமல் இருப்பது, புளிப்பு சுவை ஒத்துகொள்ளாமல் போவது, வெயிலில் அலைவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஊறுகாய், வினிகர், சில இனிப்பு வகைகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. உணவில் இஞ்சி, சீரகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

டென்ஷன் தலைவலி:நெற்றியில் மட்டும் வலியை ஏற்படுத்தும். தலைசுற்றல் மற்றும் தலைகனத்தால் வலி உண்டாகும். டென்ஷனால் ஏற்படும் தலைவலி, கழுத்தில் இருந்து தலை உச்சி வரை இருக்கும்.


தீர்வு: டென்ஷன் ஆகாமல் நம்மை எப்படி அமைதியாகப் பார்த்துக்கொள்வது என்பதைத் திட்டமிடலாம். காலையில் சீக்கிரம் எழுந்து வேலை தொடங்கினாலே, அவசரம் அவசரமாக செய்யும் நிலை ஏற்படாது. இதனால் டென்ஷன் பாதியாக குறையும். பதற்றம் வராமல் இருக்க தங்களை உற்சாகப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, கட்டுக்குள் வைப்பது நல்லது. மருத்துவர் ஆலோசனைப்படி, இதை மாத்திரைகள் மூலமாகவும் சரிசெய்யலாம்.

க்ளஸ்டர்:கண் இமைகளில் வலி ஏற்படும். அஜீரணக் கோளாறுகளாலும் இது போன்ற வலி ஏற்படும்.

தீர்வு: கண்ணைச் சுற்றி ஒருபக்கம் மட்டும் வரும் தீவிர வலி இது. இதன் அறிகுறிகளைப் பொறுத்து தீர்வுகள் மாறுபடும். சிலருக்கு தலையில் ஸ்கேன் செய்தால், என்ன பிரச்னை எனக் கண்டறிய முடியும். மருத்துவர் பரிந்துரைத்தால் வலி நிவாரணிகள் எடுக்கலாம். ஆனால், அதுவும் நிரந்தரத் தீர்வு கிடையாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரைகள், ஊசி மூலம் தீர்வை பெற முடியும். இந்த க்ளஸ்டர் தலைவலி வராமல் தடுக்க, உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்வது நல்லது. தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். உணவில் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை சாப்பிடலாம்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்...
  1. காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, எப்போதும் ஏ.சி அறையில் இருப்பது.
  2. சரியான நேரத்துக்கு தூங்காதது. 6-7 மணி நேரம் தூக்கம் கிடைக்காதபோது உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். தலைவலியும் வரும்.
  3. சிலருக்கு நைட் ஷிஃப்ட் பார்த்து வந்து பகல் நேரத்தில் தூங்குவதாலும், காலை உணவைத் தவிர்த்துவிட்டு வேலைக்கு செல்லும் பழக்கத்தாலும் தலைவலி வரும்.
  4. சுயமருத்துவம் எடுத்துக்கொள்வது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது.
  5. மன அழுத்தம், டென்ஷன், மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகிய காரணங்களால் ஏற்படும் வலி.