பித்த வெடிப்பு போகாதா? | டாக்டர் கு. கணேசன் | பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் 'பித்த வெடிப்புகள்' என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும். பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணிகளை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்தவெடிப்பை வரவேற்கும். காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான். இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும். பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக்கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறிகட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிகமாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும். உங்களுக்கு மீண்டும் மீண்டும் பித்த வெடிப்புகள் வருவதால், ஒருமுறை சருமநோய் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களுக்கு வலி ஏற்படுவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். பித்தவெடிப்புகளில் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத்தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம். இதேபோல் ஈரத்தன்மையை ஏற்படுத்தும் வேறு களிம்புகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம். பாதங்களில் தொற்றுள்ளவர்களுக்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். சிலருக்கு வலிநிவாரணிகளும் தேவைப்படலாம். இந்தத் தொல்லை மீண்டும் ஏற்படாமலிருக்க, பாதங்கள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்குப் பாதங்களை அடிக்கடி தண்ணீரில் ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். பனிக் காலத்து இரவுகளில், ஈரப்படுத்தும் களிம்புகளைப் பாதங்களில் பூசிக்கொண்டு, காலுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும். மருத்துவரின் யோசனைப்படி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, உடல் பருமனைக் குறைப்பது, பொருத்தமான காலணிகளை அணிவது போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதும் முக்கியம். பாத சருமத்தைக் காக்கப் பொதுவான வழிகள்: சத்துள்ள, சரிவிகித உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் இருமுறை சோப்புப் போட்டுக் குளித்துப் பாதங்களைப் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வறண்ட தோலில் 'லிக்விட் பாரபின்' அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவலாம்; ஈரப்பசையை உண்டாக்கும் களிம்புகளைத் தடவலாம். பொருத்தமான காலணிகளையும் ஷூக்களையும் அணியுங்கள். பருத்தியாலான காலுறைகள் மிக நல்லவை. தேவையில்லாமல் கடுங்குளிரில் / பனியில் செல்வதும் வெயிலில் அலைவதும் ஆகாது. சோப்பை அடிக்கடி மாற்றுவதும், அழகு சாதனப் பொருட்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதும் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து.
Sunday, 28 January 2018
வாய்ப்புண் தொல்லை இனி இல்லை
வாய்ப்புண் தொந்தரவால் அவதிப்படாதவர் இருக்க முடியாது. வாய்ப்புண் ஏன் வருகிறது எப்படி வருகிறது என தெரியாமல், பலர் கஷ்டப்படுகின்றனர். வாய்புண் வருவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வை தெரிந்து கொண்டால், வாய்ப்புண் வருவதை தடுக்கலாம். வாய் பகுதியிலுள்ள, மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
எந்த உணவையும், இயல்பாக சாப்பிட முடியாது. புண் உள்ள பகுதியில் உணவுப்பொருட்கள் படும் போது வலியும், எரிச்சலும் ஏற்படும்.
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.
வாய்ப்புண் வருவது ஏன்?
மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும், ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது. முரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும், மெல்லியக் காயங்கள் மூலமும், வாய்ப்புண் ஏற்படும்.
வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வாய்ப்புண்ணை உருவாக்கும். அதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும், முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை, அதிகம் சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணமாகிறது. சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.
தடுக்கும் வழிகள்: சில வழி முறைகளை கடைப்பிடிப்பது மூலம், வாய்புண் வராமல் தடுக்கலாம். நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம். மேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய, ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு, வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்கலாம்.
என்ன மருந்து?
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும். மேலும், வாய்ப்புண் தொடர்ந்தால், உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இரவில் பல் துலக்குவதன் பலன்கள்
இரவில் பல் துலக்குவதன் பலன்கள் | காலையில் தவிர இரவில் பல் துலக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இல்லை. ஆனால் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் பாதுகாக்கப்பட, இரவிலும் பற்களைத் துலக்குங்கள். தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும்போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம். இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இதற்குக் காரணம், உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பதுதான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள். படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புகொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளைப் பாதிக்கும். அதன் விளைவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இரவில் பல் துலக்குவதற்கு ஆகும் நேரம் பத்து நிமிடம்தான். ஆனால் அதனால் உண்டாகும் நற்பலன்களைப் பார்த்து அப்பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
கருவளையங்களை களைவோம்
கருவளையங்களை களைவோம் | கருவளையங்கள் உருவாகுவதற்கு சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, சோர்வு போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி கருவளையங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
* கருவளையங்களில் இருந்து மீட்டெடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் பாதாம் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இரவில் படுக்க செல்லும் முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெய்யை கருவளையம் இருக்கும் பகுதியில் தடவி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களை போக்கி விடலாம்.
* சருமத்தை பளிச்சென்று மிளிர வைப்பதிலும், கருவளையங்களை விரட்டுவதிலும் தக்காளி பழத்திற்கு பங்கு உண்டு. ஒரு டீஸ்பூன் தக்காளி சாறுடன், அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை கலந்து கொள்ள வேண்டும். அதனை கருவளையம் இருக்கும் இடங்களில் மென்மையாக தடவி விட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு தடவை செய்து வந்தால் இரண்டு, மூன்று வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
* உருளைக்கிழங்கு, கருவளையங்களை போக்குவதோடு கண்களை சுற்றி ஏற்படும் வீக்கங்களை குறைக்கும் திறன் கொண்டது. உருளைக்கிழங்கை சாறு எடுத்து பஞ்சில் முக்கி கருவளையம் இருக்கும் பகுதிகளில் ஒற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் சில வாரங்களில் கருவளையங்களை நீக்கிவிடலாம்.
* பன்னீர் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கருவளையங் களையும் போக்கும். கண்களில் ஏற்படும் சோர்வையும் விரட்டியடிக்கும். பன்னீரை பஞ்சில் முக்கி மென்மையாக கண்களை சுற்றி வருடி வர வேண்டும். பின்னர் கண்களை மூடி கண் இமைகள் மீது நனைத்த பஞ்சினை 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். அப்படி செய்தால் கண் சோர்வில் இருந்து மீண்டு விடலாம். தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
Subscribe to:
Posts (Atom)




