Sunday 20 December 2020

மூல நோய்க்கான காரணம்

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

மலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Friday 24 April 2020

வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்

வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து பலன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - ஒரு கைப்பிடி வெந்தயம் - 30 கிராம் சின்ன வெங்காயம் - 75 கிராம் ஏலரிசி - ஒரு கிராம்

செய்முறை
முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், வெந்தயம், ஏலரிசி ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை , சிவக்க வறுத்து வைத்துள்ள வெங்காயம், வெந்தயம் , ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்

பயன்கள்
இந்தக் கசாயம் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மதியம் , மாலை என மூன்று வேளையும் வேளையும் தலா 50 மி.லி அளவாக குடித்து வரவும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE

   FOOD CONSULTANCY  CENTER

   - கோவை பாலா

   இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

   Cell: 96557 58609, 75503 24609

   Covaibala15@gmail.com

Sunday 5 April 2020

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?

காற்றில் உயிர்வாழும் நேரம்

இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.

ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.

இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.

கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.

இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.

அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது.

உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி

கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.

கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.

சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.

Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?

தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.

கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.

இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.

இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

நோயாக உருவாகும் காலம்
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.

உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.

தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.

ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.

நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.

லேசான நோய்
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.

கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.

காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.

இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.

சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.

படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.

இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.

இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தீவிர பாதிப்பு
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.

உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.

நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.

உங்கள் வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.

அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.

சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.

சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

சிக்கலான நிலையில் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.

நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.

ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.

நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.

``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.

வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.

தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.

ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.

முதலாவது மரணங்கள்
சிறந்த சிகிச்சைகள் அளித்தும் சில நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பதை டாக்டர்கள் விவரித்துள்ளனர். முதல் இரு நோயாளிகள் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தனர் என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது நபர், 61 வயதான ஆண், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்திலேயே தீவிர நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்.

அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. வென்டிலேட்டர் வைத்த பிறகும், அவருடைய நுரையீரல் செயல் இழந்துவிட்டது, இருதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் அவர் இறந்து போனார்.

இரண்டாவது நோயாளி, 69 வயது ஆண், அவருக்கும் தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது.

அவருக்கு ECMO சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தீவிர நிமோனியா மற்றும் ரத்த அழுத்த குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து போனார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 1,202,827 பேருக்குப் பரவியுள்ளது. 64,771 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 2,46,886 - ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,588 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

உங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்?

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை
80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

கொரோனாவை குணப்படுத்த முடியுமா?
தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா எங்கிருந்து வந்தது?
இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்
கொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா? வெயில் அவசியமா? - மருத்துவர் விளக்கம்
கொரோனா: யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்
கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு?

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.

எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,

உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்
மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.

கொரோனா தொற்றை கையாள இந்தியா தயாராக உள்ளதா?
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.

இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாடுகள் என்னென்ன?
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியர்கள் அவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்," என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாஸ்க் அணிவது பயன் தருமா?
காற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்

உங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.