Sunday 22 September 2019

கர்ப்ப காலத்தில் பயணம் நல்லதா?

அதுவரை பிடித்ததாக இருந்த உணவு வகைகள் கருவுற்ற பிறகு திடீரெனப் பிடிக்காமல் போகலாம். அதன் வாசனையேகூடக் குமட்டலையும் வாந்தியையும் வரவழைக்கலாம். அதனால், எந்த உணவு பிடிக்கிறதோ அதைச் சாப்பிடலாம். சிலருக்குச் சாம்பல் போன்றவற்றின்மேல்கூட ஆசை ஏற்படலாம்.

உணவின் ருசியில் வரக்கூடிய திடீர் மாற்றமே வாந்தி, தலைசுற்றலுக்கும் காரணம். வாந்தி வரும் என்று பயந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது தவறு. சிறு சிறு இடைவெளிகளில் சாப்பிடுவதன் மூலமும் அதிகப்படியான திரவ உணவைப் பருகுவதன் மூலமும் இதைக் கையாள முடியும். மிதமான வாந்தி வருபவர்கள், வைட்டமின் B-6 மாதிரியான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

கடுமையான வாந்தியால் பாதிக்கப்படும் சிலருக்கு, தண்ணீர் குடித்தால்கூட வாந்தி வரும். அப்படியென்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவது ஆபத்தானது. எது சாதாரணமான வாந்தி, எது மிதமானது, எது சிக்கலானது என்பதை அவரவர்தான் தீர்மானிக்க இயலும். அவர்களாலேயே சமாளித்துவிடக் கூடியது என்றால் பிரச்சினை இல்லை. இரண்டு, மூன்று முறை வந்தால்கூடச் சமாளிக்கலாம். ஒரேயடி யாகச் சமாளிக்க முடியாதபோது மருத்துவரிடம் போக வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் சிலருக்குத் தலைசுற்றல் இருக்கலாம். இதில் பயப்பட ஏதுமில்லை. ஓய்வெடுத்தாலே போதும். சிலருக்கு அதிகப்படி யான களைப்பு இருக்கலாம். எப்போதும் தூக்கம் வருவது போல் இருக்கலாம். காலை யில் எழுந்துவந்து சிறிது நேரம் நடமாடிவிட்ட பிறகு திரும்பவும் தூங்கத் தோன்றலாம். உடலின் உள்ளே நடக்கக்கூடிய மாற்றங்களால் வெளியே தெரியக்கூடிய அறிகுறிகள் இவை. இத னால்தான் நிறைய பெண்களுக்கு இந்த நேரத்தில் அம்மா உடன் இருக்க வேண்டும் எனத் தோன்றும்.

கர்ப்ப காலத்தில் அதிகப்படி யான காரம், உப்பு, எண்ணெய் நிறைந்த உணவைச் சாப்பிடு வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், வாந்தி எடுக்கும்போது இவற்றால் அதிகப்படியாக வரக்கூடிய நெஞ்சு எரிச்சலைத் தவிர்க்கலாம்.

ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைவிட, சிறு சிறு இடை வேளைகளில் பிரித்து உண்பது நல்லது. அன்னாசி, பப்பாளி போன்ற பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை கர்ப்பப்பையைச் சுருக்கி விரியச் செய்யும் தன்மையுடையவை. ஆரோக்கியமான கர்ப்பமுடையவர்களுக்கு இது பிரச்சினை இல்லை என்றாலும் சிலருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். தேவையில்லாத சிக்கல். எனவே, தவிர்ப்பது நல்லது. மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட வற்றல், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவைவிட அவ்வப்போது சமைக்கப் பட்டவற்றைச் சாப்பிடுவது நல்லது. சாம்பல் சாப்பிடத் தோன்றும்போது ஒரு மாங்காய்த் துண்டையோ எலுமிச்சைத் துண்டையோ சுவைக்கலாம்.

முதல் மூன்று மாதங்களில் ஆரம்ப அறிகுறிகள், எதிர்பார்ப்புகள், பதற்றங்கள் குறைந்த பிறகு வருகிற இரண்டாம் மும்மாத காலத்தை நல்ல நேரம் என்றே சொல்லலாம். முதல் மூன்று மாதத்தில் வாந்திப் பிரச்சினை இருந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கு இந்தப் பிரச்சினை நின்றுவிடும். நன்றாகப் பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிட்டால் வாந்தி வரும் என்ற பயம் போய், நன்றாகச் சாப்பிடத் தோன்றும். எதைப் பார்த்தாலும் சாப்பிடத் தோன்றும். இதில் எந்தப் பிரச்சி னையும் இல்லை. நன்றாகச் சாப்பிடலாம். ஏனென்றால், முதல் மூன்று மாதங்கள் கரு உருவாவதற்கானவை. இரண்டாவது மூன்று மாதங்கள், கரு வளர்வதற்கானவை. இந்த நேரத்தில் நன்கு சாப்பிட்டுத் தூங்கி தாய்மார்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஹார்மோன் மாற்றங்களெல்லாம் சீரான நிலைக்கு வந்துவிடும்.

சிலருக்குக் கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வரக்கூடும். மற்ற நேரத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏனென்றால், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளில் 99 சதவீத மாத்திரைகளை இந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது.

ஒன்று உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது இன்சுலின் போட வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கர்ப்ப காலம் முடிந்த பிறகு இது தானாகச் சரியாகிவிடும். ஆனால், கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தவர் களுக்குப் பின்னாட்களில் மீண்டும் நீரிழிவு ஏற்படக்கூடும். ஏனென்றால் மன அழுத்தத்தை ஒட்டித்தான் இவர்களுக்கு நீரிழிவு வருகிறது. எனவே, பின்னாட்களிலும் அதே காரணத்தால் வர வாய்ப்பிருக்கிறது.

நீரிழிவு நோயை அலட்சியப் படுத்தக் கூடாது. அது குழந்தை யைப் பாதிக்கக்கூடும். தாயின் நீரிழிவுப் பிரச்சினை நேரடியாகக் குழந்தையைப் பாதிக்கும். குழந்தை எடை அதிகமாகப் பிறக்கலாம். தண்ணீர் அதிகரிக்கலாம். குறைப்பிரசவமாகலாம். ஆகவே, கர்ப்ப காலத்து நீரிழிவு நோயைக் கண்காணித்து அதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கர்ப்ப மல்லாத நாட்களில் நீரிழிவு நோயைச் சிலர் மாதக்கணக்கில்கூடப் பரிசோதிக்காமல் விடக்கூடும். ஆனால், கர்ப்ப காலத்தில் மருத்து வர் பரிந்துரைப்பதைச் செய்தே தீரவேண்டும். ஆகவேதான், இந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவர் தவிர பொதுநல மருத்துவரையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம்

இதேபோல் கர்ப்ப காலத்தில் கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு வரக்கூடும். இது பெரும்பாலானோருக்கு முதல் பிரசவத்தின்போதுதான் வரும். முன்னதாகவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். குறைப்பிரசவம், குழந்தைச் சரியான வளர்ச்சியில்லாமல் இருப்பது போன்றவை நிகழலாம். தாய்க்குப் பிரசவ காலத்துக்கு முன் உயர் ரத்த அழுத்தம் அதிகமானால் வலிப்பு வரக்கூடும். இதனால், உயர் ரத்த அழுத்தத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். இதற்காகப் பயப்பட வேண்டாம். கவனத்துடன் இருந்தால் போதும். சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிவது, தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவற்றால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம்.

கர்ப்ப காலத்தில் வந்த உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே பிரசவமான ஆறு வாரத்துக்குள் சரியாகிவிடும். சிலருக்கு அப்போது ஆரம்பித்து, பிரச்சினை தொடர்ந்து நீடிக்கலாம். பரிசோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. கர்ப்ப காலத்தில் பயணங்களை ஒரேயடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பாதுகாப்பாகப் பயணிக் கலாம். மோசமான வண்டிகள், சாலைகளில் பயணங்களைத் தவிர்க்கலாம். விமானப் பயணத்தையும் முடிந்தால் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான கர்ப்பம் பயணத்தாலோ உடற்பயிற்சிகளாலோ கலையாது. கவனத்துடன் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லியிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

கல்விச்சோலை - kalvisolai health tips