Saturday, 22 December 2018

மனச்சிதைவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

மனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர். அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai health tips

ரத்தம் உறையாமை நோய்

உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.

உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.

பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர் கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.

இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.

அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Saturday, 1 December 2018

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.

‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.

‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.

கல்விச்சோலை - kalvisolai health tips

Thursday, 1 November 2018

காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் விளக்கம் 

காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் விளக்கம் 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக உள்ளது. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காய்ச்சல்களின் தீவிரத்தால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் குறித்து தெரிந்துகொண்டு விழிப்புணர் வுடன் இருக்கும்படி தமிழக சுகா தாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி, செய்தியாளரிடம் கூறியதாவது:

இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.

எப்படி பரவுகிறது?

நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது.

கொசு உற்பத்தியாகும் இடம்

டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்களில் தேங்கும் நீரில் உருவாகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக் கம் செய்கிறது. ஏடிஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது.

காய்ச்சலின் அறிகுறிகள்

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறி களாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக் களின் எண்ணிக்கை குறையும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.

கவனிக்க வேண்டியவை

டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண் டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட் கொண்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

எவ்வாறு குணப்படுத்தலாம்?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை யும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற் றும் மருத்துவ மனையில் கொடுக்கப் படும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவை யான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் நின்ற பின்னர் மூன்று நாட்களுக்கு மிகவும் கவன மாக இருக்க வேண்டும். பசி எடுக்க வில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

வராமல் தடுக்க

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங் களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப் பட்டது. ஆரம்பத்தில் பன்றி களிடையே இந்த காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர் களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.

அறிகுறிகள் என்ன?

சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறி களாகும். சிலருக்கு இந்த அறிகுறி களுடன் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

எப்படி பரவுகிறது?

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவு கிறது. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல் வேறு பொருட்களை நாம் தொடும் போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன் பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது.

வராமல் தடுப்பது எப்படி?

வீட்டில் இருந்து பள்ளி, அலுவல கம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகியிருக்க வேண்டும்.

மாத்திரை, மருந்துகள் என்ன?

பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரை உள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும்.

காய்ச்சல் வந்தால்..

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோ சனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோ சனை இல்லாமல் தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பள்ளி, அலுவலகம் மற் றும் பொது இடங்களுக்கு செல் வதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல் லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய கைக் குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக சிறப்பு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.டெங்கு காய்ச்சல்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும். பன்றி காய்ச்சல்: சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 21 October 2018

பெண்களின் உடல் மணக்கட்டும்..

பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும். நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பி கள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன. எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி? வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன் படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்து வரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர் களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
டியோடரண்டுகள் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க..

ரசாயனப் பொருட்களின் கலவைதான் டியோடரண்டுகளாக உருவாகின்றன. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா விதமான ரசாயனங்களும் ஒத்துக்கொள்ளாது. ஒத்துக்கொள்ளாததை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அதை பயன்படுத்தாதீர்கள்.

டியோடரண்ட் பயன்படுத்தும் ஆண்கள், முகசவரம் செய்த உடன் இதனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் சொறி, திட்டாக தடித்தல் போன்றவை ஏற்படும். இந்த தொந்தரவை தவிர்க்க ஒரு மணி நேர இடைவெளியாவது அவசியம்.

திரவம் மற்றும் ஸ்பிரே வடிவில் இருக்கும் டியோடரண்ட்டை நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்துங்கள்.

சில வகை டியோடரண்டுகள் வியர்வையோடு செயல்பட்டு அணியும் உடைகளில் மஞ்சள் நிறத்தை உருவாக்கிவிடும். அதை கவனத்தில்கொண்டு பயன்படுத்துங்கள். ஒரே இடத்தில் அதிக அளவு டியோடரண்டு பயன்படுத்த வேண்டாம்.

எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள். தினமும் குளித்து, உடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பது, டியோடரண்டு பயன்பாட்டை குறைக்கும். உடலையும் மணக்கச் செய்யும்.

கல்விச்சோலை - kalvisolai health tips