Saturday 31 March 2018

கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்


கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும் ‘கொலஸ்ட்ரால்’ என்ற சொல்லே இன்று பலரைப் பய முறுத்துவதாக இருக்கிறது. வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத இன்னொரு ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது. சிறுவயதிலேயே ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிய ஆரம்பித்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். கொலஸ்ட்ரால் நமது ரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும்? வெளிப்படையாக உங்களுக்கு உடல் வலியோ, கழுத்து வலியோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறு எந்தப் பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்லச் செல்ல பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், கண்பார்வை பாதிப்பு போன்ற கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில், ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். அதாவது, ‘லிபிட் புரொபைல்’ என்ற பரி சோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்தலாம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்பரிசோதனையைச் செய்வது நல்லது. ஆனால், கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள அனைவருமே வயது வித்தியாசம் இன்றி இச்சோதனையைச் செய்ய வேண்டும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ‘ரீனல் பெய்லியர்’ எனப்படும் சிறுநீரக வழுவல் உள்ளவர்கள், மாரடைப்பு, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்களும், அது ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களும், அதாவது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட ரத்த உறவுகளைக் கொண்டவர்கள், உடல்பருமன் உடையவர்கள், புகை, மதுபான பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்புக் குறைந்த பணி செய்பவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் வயது வேறுபாடின்றி தமது ரத்த கொலஸ்ட்ரால் அளவை அறிந்திருப்பது அவசியமாகும். ரத்த கொலஸ்ட்ராலில் டோட்டல் கொலஸ்ட்ரால், எல்டிஎல், எச்டிஎல், டிரைகிளிசரைடு எனப் பலவகை உண்டு. இந்த கொலஸ்ட்ரால் வகைகளில் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டியவை, கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படும் எல்டிஎல் (லோ டென்சிட்டி லிபோபுரோட்டீன்) கொலஸ்ட்ராலும், டிரைகிளிசரைடு கொலஸ்ட்ராலும் ஆகும். இந்த கொலஸ்ட்ரால் வகைகள் அதிகரிப்பதற்கு, உணவு சார்ந்த காரணிகள் 25 சதவீதம்தான். எஞ்சிய 75 சதவீதத்துக்கு ஏனைய காரணிகளே காரணம். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த மற்ற காரணிகளின் பங்கு விவரம்.... பரம்பரை அம்சங்கள் 15 சதவீதம், மேலும், அதிகமான எடை 12, ஹார்மோன்களும் நொதிகளும் 8, உயர் ரத்த அழுத்தம் 8, மதுப்பழக்கம் 2, மனஅழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், சமூக பொருளாதார நிலை 8, சர்க்கரை நோய் 7, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை 6, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு 6, பாலினம், வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற பிற காரணிகள் 5 என்ற சதவீத அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் அபாயத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிக உயர்ந்த அளவான 25 சதவீதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைதான். எனவே நமது தவறான உணவுப் பழக்கமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. உணவுமுறைக்கு அடுத்தபடியாக பரம்பரை அம்சம் உள்ளது. இது 15 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. சரி, கொலஸ்ட்ரால் நம்மை நாடாமல் எப்படித் தவிர்ப்பது? நமது உணவுமுறையில், கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறைக்க வேண்டும். முழுத்தானிய உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்ள வேண்டும். புகை, மதுப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். தினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமது எடையை நம் உயரத்துக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மருத்து வர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ரொம்பவும் முக்கியம். கவனத்தோடு நடந்துகொண்டால், கொலஸ்ட்ரால் பற்றிக் கவலையில்லை!

No comments: